புதன் இரவு 1.30 வரை விழித்திருந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்தது வீண் போகவில்லை. மிக அற்புதமான மேட்ச். மீண்டும் என்னை பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றது. ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடும் போது மட்டும் ஏன் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம் என்றுதான் தெரியவில்லை. அதை ஏன் நம்மால் ஒரு மேட்சாக பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு போர் நடப்பது போல் அல்லவா நினைக்கிறோம். டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரி அடிப்பார் என்று பார்த்தால் ஏமாற்றமே. மும்பையில் பைனலில் நிச்சயம் செஞ்சுரி அடிப்பார் என்று நம்புகிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். World Cupம் நமக்குத்தான் என்று நினைக்கிறேன். பார்ப்போம்...
**************************************************
'ழ' பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. விழாவிற்கு நான் செல்லவில்லையே என்ற ஏக்கம் அன்று முழுவதும் இருந்தது. சென்ற ஞாயிறு அன்று இரவு எங்கும் செல்லவில்லை. என் குழந்தைகள் பிறந்ததினம் அன்று ஏற்பட்ட அதே உணர்வு அன்றும் ஏற்பட்டது. கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது. புத்தகங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்ற பயமும் இருந்தது. ஒரளவிற்கு புத்தகங்கள் விற்று இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. இன்னும் ஒரு டென்ஷன் பாக்கி இருக்கிறது. காரணம் என் அக்காக்கள் மற்றும் உறவினர்கள் இன்று முதல் படிக்க இருக்கிறார்கள். நான் ஏற்கனவே என் மூன்றாவது அக்காவிடம் சொன்னேன்,
"சந்தோஷ் சுபரமணியம் படத்தில் ஒரு காட்சி வரும். ஜெயம் ரவியைப் பற்றி வீட்டில் நல்ல இமேஜ் வைத்திருப்பார்கள், ஜெனிலியா அவரைப் பற்றி ரவியின் அண்ணிகளிடமும், தங்கையிடமும் சில விசயங்கள் சொல்லுவார். அவர்கள் உடனே, அப்படியா? எங்கள் வீட்டு பிள்ளை அப்படிப்பட்டவனா? என்று ஆச்சர்யப்படுவார்கள். அதுபோல் நீங்கள் என்னைப்பற்றி வைத்திருக்கும் பிம்பம் உடையப்போகிறது" என்றேன்.
"பார்ப்போமே, உன்னைப் பற்றியும் தெரிந்து கொள்வோமே" என்று சொல்லி இருக்கிறார்கள். அதான் டென்ஷ்ன்.
**************************************************
நான் ஜனவரியில் ஊரில் இருந்த போது என் இரண்டாவது அக்காவிடம் என் மனைவி ஒரு கதையின் பிரின்ட் அவுட்டை கொடுத்து (புத்தகம் அச்சிடும் முன்) படிக்கச் சொன்னார்கள். அவர் ஒரு பாரா படித்துவிட்டு தூக்கி எரிந்து விட்டார். எனக்கு அழுகையே வந்துவிட்டது.
பிறகு நான் "உனக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த கதை நான் 25 வருடங்களுக்கு முன் எழுதியது. பலரால் பாரட்டப்பட்டது. பரிசு வாங்கியது" என்று சொல்லி அதை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.
பின் இரவு நான் வீட்டிற்கு வந்தவுடன் என் அக்கா,
"டேய் அந்த கதை நல்லா இருந்துச்சுடா" என்றார்கள்.
"உனக்கு எப்படி கதை கிடைத்தது. நாந்தான் அதை வேறு இடத்தில் வைத்துவிட்டேனே" என்றேன்.
"கண்டு பிடித்து எடுத்து படித்தேன்"
"அப்போது ஏன் தூக்கி எரிந்தாய்?"
"என் தம்பி போய் கன்னா பின்னா என்று காதல் கதை எழுதுவதா?"
எனக்கு ஒரே ஆச்சர்யம். தம்பிக்கு வயது ஆகிவிட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இன்னும் என்னை சிறுவனாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பயமாக இருக்கிறது. படித்தவுடன் என்ன சொல்வார்களோ என்று?
**************************************************
நேற்று மதியம் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தேன். சென்னையிலிருந்து ஒருவர் அழைத்தார். அவர் பெயர் ஹரிஹரன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டராம். பிறகு அவரை வைக்க சொல்லி விட்டு நான் அழைத்தேன். நண்பர் கேபிள் சங்கர் மூலம் என் நம்பர் கிடைத்திருக்கிறது. ஒரு 15 நிமிடம் என் "சாமன்யனின் கதை" புத்தகத்தைப் பற்றி பேசினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். ஒவ்வொரு கட்டுரையாக விமர்சித்தார். "81ம் பக்கத்தில் இருக்கிறேன் சார், முழுவதும் முடித்தவுடன் அழைக்கிறேன்" என்றார். நாம் "நிச்சயம் சந்திக்க வேண்டும். என்னை போன்றவர்களுக்கு உங்கள் புத்தகம் ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது" என்றார். நண்பர்கள், உறவினர்கள் அழைத்து பாராட்டுவது முக்கியமல்ல. ஆனால் முகம் தெரியாத ஒருவர் அழைத்து பாராட்டுவது மிக முக்கியம் அல்லவா? இப்போது அதிக பொறுப்பு வந்திருக்கிறது. நல்ல விசயங்கள் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த சந்தோசத்திற்கு காரணமான "ழ" பதிப்பகத்திற்கும், நண்பர் கேபிள் சங்கருக்கும் மற்றும் நண்பர் கே ஆர் பி செந்திலுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி.
**************************************************
சினிமா இந்த அளவிற்கு குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை.
இரண்டாவது படிக்கும் என் பையன் எழுதி இருப்பதைப் பாருங்கள்:
"Living Things" என்பதற்கு உதாராணமாய் "ரோபோ" என்று எழுதி இருக்கிறான். என்னடா இது? என்று கேட்டால், "எந்திரன் படத்துல ரோபோ பேசலியா நடக்கலையா?" என்கிறான். இது கூட பரவாயில்லை. இன்னொரு கேள்விக்கு அவன் எழுதி இருக்கும் பதிலைப் பாருங்கள்:
Question: Please give five ways to express your anger or frustration to someone who is lazy?
01. I will beat him with a rock
02. I will punch him with leg
03. Slaps with my hand
04. I do not friend forever
05. I will scold him
டீச்சர் படித்துவிட்டு, "Not good attitude" என்று எழுதி அனுப்பியுள்ளார். நான் அவனிடம், "ஏண்டா, இதெல்லாம் தப்பு இல்லையா?" என்றால், "என்ன தப்பு? அவன் லேசியா இருக்கான். சினிமால அன்னைக்கு அவங்க அப்பா அவனை அடிக்கலை" என்கிறான்.
எவனை எந்த அப்பா அடிச்சான்னு எனக்குத் தெரியலை. அவனால எனக்கு கிடைச்ச பேர், "அப்பனுக்கு பிள்ளை தப்பாம்ம பொறந்துருக்கு"
**************************************************
5 comments:
மிக்க நன்றி தலைவரே..
அக்கா படிச்சுட்டு ரொம்ப சந்தோசப்படுவாங்க பாருங்க...
வாழ்த்துக்கள் உலக்ஸ்
முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!(01.04.11)
//கே.ஆர்.பி.செந்தில் said...
மிக்க நன்றி தலைவரே..
அக்கா படிச்சுட்டு ரொம்ப சந்தோசப்படுவாங்க பாருங்க...//
வருகைக்கு நன்றி தலைவரே!
// manige said...
வாழ்த்துக்கள் உலக்ஸ்//
மணிஜி, நீங்களா? வேற ஏதோ ஐடி மாதிரி இருக்கு.
Post a Comment