ஒவ்வொரு முறையும் பிள்ளைகளின் வருட விடுமுறைக்கு எங்கு செல்வது? என்று முடிவு எடுப்பதற்குள் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். போன வருடமும் அப்படித்தான். பிள்ளைகளுக்கு பரிட்சை முடிந்து ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்பதில் எங்களுக்குள்ளே ஏகப்பட்ட மாற்றுக் கருத்துக்கள். எங்கள் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். மூன்று அக்கா. ஒரு தங்கை, இரண்டு தம்பிகள். என்னையும் சேர்த்து எங்கள் பெற்றோருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். இரண்டு சித்தப்பாக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட பிள்ளைகள். நான்கு அத்தைகள் அவர்களுக்கும் நிறைய பிள்ளைகள். சித்தப்பா, அத்தை பிள்ளைகளுக்கும், ஏன் அக்காக்களின் பிள்ளைகளுக்கும் கூட கல்யாணம் ஆகிவிட்டது. எல்லோருமே நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கின்றார்கள்.
என் பெரிய அக்காவின் பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். வருடம் ஒரு முறை இந்தியா வந்து செல்வான். அவன் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அக்காவின் பெண்ணை லண்டனில் ஒரு டாக்டருக்கு கட்டிக்கொடுத்து இருக்கிறார். இருவருக்கும் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது அக்காவிற்கு இரண்டுமே பெண் பிள்ளைகள்தான். ஒருத்திக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டாமவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது அக்காவிற்கு ஏகப்பட்ட குழந்தைகள். இரண்டு ஆண், இரண்டு பெண். இரண்டுமே ரொம்ப குறும்பு. வால்கள்.
அடுத்து நான். எனக்கும் இரண்டு பிள்ளைகள். அடுத்து உள்ள தங்கைக்கு மூன்று பிள்ளைகள். முதல் தம்பி காதல் கல்யாணம். அவனுக்கும் மூன்று பிள்ளைகள். அவன் கனடாவில் உள்ளான். அவனும் மனைவியுடனும், குழந்தையுடனும் வருடத்திற்கு ஒரு முறை வந்து செல்வான். கடைசி தம்பி அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனுக்கும் இரண்டு பிள்ளைகள்.
இதைத்தவிர சித்தாப்பாவின் பேரக் குழந்தைகள், அத்தையின் பேரக்குழந்தைகள் என வீடு நிறைய குழந்தைகள். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் வரை நாங்கள் கூட்டுக்குடும்பத்தில்தான் இருந்தோம். பிறகு அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, வெவ்வேறு வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் இன்னமும் ஏதாவது குடும்ப விழா என்றாலோ இல்லை தீபாவளி, பொங்கல் என்றாலோ அனைவரும் எங்கள் வீட்டில்தான் ஆஜர். எல்லோருக்குமே எங்கள் அப்பா அம்மாதான் தலைவன், தலைவி மாதிரி. அனைத்து முடிவுகளுமே அப்பாத்தான் எடுப்பார். அவர் சொல்லுக்கு அனைவருமே கட்டுப்படுவார்கள்.
எங்கள் குடும்பம் மற்றும் சொந்தக்காரர்களின் குடும்பங்கள் கூட மிக நல்ல நிலையில் உள்ளனர். எல்லோருமே நல்ல மகிழ்ச்சியுடனும் நிறைய சொத்து சுகங்களுடன் உள்ளனர். ஊரில் உள்ளவர்கள் எல்லோருமே எங்கள் குடும்பங்களை பார்த்து ஆச்சர்யப்படுவதுண்டு. அந்த அளவிற்கு புண்ணியம் செய்தவர்கள் நாங்கள்.
அதனால்தான் போன வருட விடுமுறைக்கு முன்பு, விடுமுறைக்கு எங்கு செல்வது என்று குழம்பி தவித்தோம் என்று முதல் பத்தியில் சொல்லியிருந்தேன். விடுமுறைக்கு எங்கே, யார் வீட்டிற்கு செல்வது? எங்கு சென்றாலும் ஒரே சந்தோசம்தான். அதனால்தான் முடிவு எடுக்க முடியாமல் தவித்தோம். பிறகு ஒரு வழியாக எல்லோரையும் எங்கள் வீட்டிற்கே வரவைக்கலாம் என முடிவெடுத்தோம். உள்நாடு, வெளிநாடு என அனைவருக்கும் போன் செய்து வரவைத்தோம்.
எல்லோரையும் சேர்த்தால் 100 பேருக்கு மேல் வரும். அனைவருக்கும் சமைப்பது என்பது இயலாத காரியம். அதனால் ஒரு சமையல்காரரை விடுமுறை முடியும் வரை சமைக்க நியமித்தோம். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதமும் ஒரே கூத்தும் கும்மாளமும்தான். படம் பார்த்தோம். சீட்டு விளையாடினோம். வயலுக்குப் போனோம். கோவில்களுக்கு போனோம். பத்தாததுக்கு என் மனைவியின் தங்கை குடும்பமும் சேர்ந்து கொண்டது. " இது போன்ற சொந்தம் கொண்டதால் இறைவா வா நன்றி சொல்கிறோம்" என்று பாடி மகிழ்ந்தோம்.
எங்கு போனாலும் பஸ்ஸில்தான் போவோம். பஸ் என்றால் அரசுப் பேருந்து இல்லை. ஒரு மாதத்திற்கு ஒரு பஸ்ஸையே வாடைக்கு வாங்கிவிட்டோம். ஊரே ஆச்சர்யப்பட்டு எங்களை பார்த்தது. பணம் நிறைய செலவு செய்யப்பட்டது. யார் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு எல்லோரிடமுமே நிறைய பணப்புழக்கம்.
அனைவரும் சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம். நிறைய அனாதை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் நிறைய உதவிகள் செய்ய தீர்மானித்து அதன்படி செய்து வருகிறோம். அம்மா, அப்பாவிற்கு நிறைய சந்தோசம். இதுபோல் எப்போதும் எல்லோரும் சந்தோசமாக இருக்க வாழ்த்தினார்கள். நாங்கள் எல்லோரும் அவர்களிடம் ஆசிர்வாதம் அதாவது நமஸ்காரம் பண்ணி முடிக்கவே இரண்டு மணி நேரம் ஆனது. பிறகு ஒரு வழியாக விடுமுறை முடிந்து அவரவர் இல்லம் நோக்கி புறப்பட்டு வந்து விட்டொம். இனி அடுத்த விடுமுறைக்குத்தான் இந்த சந்தோசம் கிடைக்கும்.
நீங்கள் அனுபவித்த சந்தோசத்தை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்? என்கின்றீர்களா? விசயம் இருக்கிறது.
**********************************************************
மேலே சொன்னமாதிரி அனைவரின் வாழ்க்கையும் சந்தோசமாக அமையவேண்டும் என்றுதான் எங்கள் கொள்ளு தாத்தாவோ அல்லது எங்கள் தாத்தாவோ அல்லது எங்கள் அப்பாவோ வாழ்க்கையை ஆரம்பித்து இருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்ன உறவு முறைகள் வேண்டுமானால ஒரு சில உண்மையாக இருக்கலாம். ஆனால் சந்தோசங்கள்....????? ஒரு வேளை அடுத்தப் பிறவியில் அவர்கள் அனைவருக்கும் கிடைக்குமோ????
அப்படியென்றால் அனைத்தும் உண்மை இல்லையா? அப்படி என்ன சோகங்கள் என்று கேட்கின்றீர்களா?
என்னுடைய பதில் இதுதான்:
ஏன் இருக்கின்ற மெகாத்தொடர்களின் சோகங்கள் போதாதா உங்களுக்கு?
